Friday, 15 November 2013

தலையில்லா நினைவுகள்!



காலை வேளை கடந்து போனதை உறுதி செய்யும் வாகனங்களின் இரைச்சல் காதுகளுக்குள் பாய, சோம்பல் மு றித்தவாறே கண்களைத் திறந்தேன். உறங்கும் முன் மனைவியின் இடையே கிடத்திய கணினியை காணவில்லை. கண்களைக் கசக்கியபடி கட்டிலுக்கடியில் துழாவ கணினியோடு ஒரு பொம்மையும் வந்தது. தலையின்றி வெற்றுடலுடன் நெடுநாட்களாய் நீள்உறக்கம் புரிந்திருக்கக் கூடும். ஒரு கையால் கணினியைக் கட்டிலில் வைத்தவாறே அக்கன்னி பொம்மையோடு கட்டிலில் அமர்ந்தேன்.

பொம்மையென்ற போதும் தலையற்ற உடல் மனதை ஏதோ செய்தது. பெண் பொம்மையாக இருந்தது வேறு பாரத்தை அதிகமாக்கியது. என்றோ ஒரு நாள் என் மகனுக்காக அப்பா இதைப் பரிசளித்தது நினைவிற்கு வந்தது. பழுப்பா? மஞ்சளா? என அறியாத ஒரு நிறத்தில் இரட்டை சடையோடும் குட்டை கவுணும் அணிந்திருந்ததாக ஒரு நினைவு.

சிறு வயதில் கடைத் தெருவில் இதே போல பொம்மையைப் பார்த்துவிட்டு அது வேண்டுமென அடம் பிடித்தது நிழலாடியது. நானும் அக்காவும் அப்பாவின் தீபாவளி  போனசில் அடம் பிடுத்து வாங்கிய பொம்மையை குளிப்பாட்டிசட்டை போட்டு, மண் சாமான்களில் சமைத்து நாங்களும் பொம்மையும் சமபந்தி சாப்பிட்டது பிடித்திருந்தது.

எத்தனையோ நாட்கள் பொம்மையோடு பேசி, தூங்கி, மடியிலே வைத்து தாலாட்டி திரிந்ததுண்டு. தூங்கும்போது நெஞ்சோடு அணைத்திருந்த பொம்மையை பிடுங்கியதற்காக ஒரு ராத்திரி முழுவதும் யாரையும் தூங்க விடாமல் அழுதது,இப்போது சிரிக்க வைக்கிறது .

எனக்கு ஒரு வாய் பொம்மைக்கு ஒரு வாய் என சோறு ஊட்டும் அக்கா எனக்கும் அதற்கும் ஒன்றாக வாய் துடைத்துவிட்ட நிகழ்வுகள் இன்னமும் நெஞ்சில் உண்டு.

எத்தனைக் கொஞ்சல்கள் எத்தனைக் கதைகள் பேசியிருப்போம் அந்தப் பொம்மையோடு. இந்த பொம்மையும் அப்படிதான் ஆசைப்பட்டிருக்குமோ? இதெல்லாம் என் மகனும் செய்திருப்பானோ? எனக்குத் தெரியவில்லை

ஏதோ கேட்பதற்காக உள்ளே வந்த மனைவி பொம்மையின் கவுன் நிறத்தில் உடுத்திருந்தார். அழகாயிருந்ததது. “என்னங்க அது, பாப்பா பொம்மையா? மாமா எவ்ளோ ஆசையா வாங்கிட்டு வந்தார் இல்ல? ஆனால் கவினுக்குதான் அது பிடிக்கவில்லைப் போல, அதைக் கையில வாங்கும்போது தொட்டதோட சரி அப்புறம் தொடவேயில்ல? என்ன தலையக் காணோம். எங்கேயிருந்து இதக் கண்டுபிடிச்சிங்க ? சரி சரி பல்லு தேய்ங்க….” என பேசிக் கொண்டே உள்ளே போனார்.

மனைவியின் சத்தம் கேட்டு விளையாடிக் கொண்டிருந்தவீடியோ கேமில் ஒருகட்டம்முடித்த சந்தோசத்தில் உள்ளே வந்த கவின் என் கையிலிருந்த தலையற்றப் பொம்மையைப் பார்த்து முகஞ்சுளித்துஒரேக் குப்பைப்பா.. வெளியத் தூக்கிப்  போடுங்கப்பா?” என்நிதானமாகசொல்லிவிட்டு போய் அடுத்தக் கட்டத்துக்கான  துப்பாக்கிச் சூட்டிற்கு குண்டு நிரப்பிக் கொண்டு குறி பார்க்க ஆரம்பித்தான்.

நிரல்கள் எழுதி பெரிய நிறுவனங்களை மலைக்க வைத்த எனக்கு நினைவுகளை நிறுத்த முடியவில்லை. ஆடைகளை சரி செய்தபடி பொம்மையைக் கையில் பிடித்துக் கொண்டு தலையைத் தேடிப் போனேன்.

ஒவ்வொரு வீடும் சுத்தப்படுத்தமுடியாத மூலையை தன்னிலேக் கொண்டிருக்கிறது. அடுப்படியோ, அலமாரியோரமோ மாடிப்படி அடியோ பயன்படுத்தி சலித்தப் பொருட்கள் குவிந்துக் கிடக்கின்றன. நான் என் வீட்டு படிக்கட்டுக்கடியில் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தேன்.

ஏதேதோ பொருட்கள் கைக்கு அகப்பட்டதேயன்றி பொம்மையின் தலைதான் கிடைத்தபாடில்லை. சாக்குப் பையைக் கொட்டித் தேடினேன். ரிமோட் கார் ஒன்று சக்கரமில்லாமல் உருண்டோடியது. தேடுவது பொம்மைத்தலைதான் என்றபோதும் மனது நிலை கொல்ல மறுத்தது. ‘எண்ணங்களுக்குக் கோடு கிடைக்கும்போது அது தனக்குத்தானே ரோடு போட்டு பயணிக்கும் திசைகள் ஏனோ நமக்குப் புரிவதில்லை’. தேடித் தேடி சலித்துப் போனேன். திரும்ப படுக்கைக்கு வந்து உட்கார்ந்தேன்.

விளையாட்டு முடிந்து எழுந்து வந்தப் பையன் என்னைப் பார்த்த படியே பின்னறைக்குப் போய் ஈரத்தில் ஊறியிருந்த பொம்மையின் தலையை எடுத்துக் கொண்டு வந்து தந்தான். பொம்மையின் பளிங்கு கண்ணிலிருந்த கண் இமைகள் உதிர்ந்திருந்தது. தண்ணீருக்குள்ளே கிடந்து நன்றாக ஊறியிருக்க வேண்டும்,. தூசும் ஈரமும் படிந்து கேசம் உதிர்ந்து போய் வெறும் மொட்டை தலைமட்டும் இருந்தது. “எங்கேயிருந்தது?” என்று கேட்டேன். ஏதோ சொன்னபடியே அவன் கார்ட்டூன் பார்க்கரிமோட் கண்ட்ரோலைத்தேடிக்கொண்டிருந்தான் .

தலையைத் துடைத்து பொருத்திப் பார்த்தேன். ரப்பர் தலை விரிந்து போயிருந்தது. உடலோடு பொருந்த மறுக்கிறது. தலையையும் உடலையும் இரண்டு கையிலும் பிடித்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போதும் சிரித்துக் கொண்டிருந்தது பொம்மை. கண்கள் இமைப்பது போலிருந்தது

என் பையன், கண் இமைக்காமல் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தான் ..


(இந்தக் கதை எழுத்தாளர் எஸ்.ரா எழுதியபேசும் பொம்மைகட்டுரையின் தாக்கம்)

No comments:

Post a Comment