Sunday, 21 December 2014

என் ஈகோ- என் அடையாளம்

புரிதலும் புரிதல் நிமித்தமும்  2
நடு ரோட்டில் ஒருத்தர் அடிப்பட்டு விழுந்துக்கிடக்கிறபோது அவரைச் சுற்றி ஒரு கும்பல் பார்த்துக் கொண்டே இருக்குமே எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?
இது ஏன் என கடைசியில் தெரிந்துகொள்வீர்கள்
‘அவர்க்கு ஈகோ அதிகம்’
‘இவர் ஈகோயிஸ்ட்’
‘என்னோட ஈகோ இடம் கொடுக்க வில்லை’
இப்படியாக நாம் அடிக்கடிப் பேசுவோம் இல்லையா? அப்படி என்றால் ஈகோ என்பது என்ன..?
மனித மனம், மூன்று இணைந்து செயல்படும் உறுப்புகளாக இருக்கிறது என்று ஃப்ராயட் சொல்வார். அதாவது,
  1. ஈட்- ID (லேசான “ஏட்” என்ற உச்சரிப்பும் இருக்கிறது)
  2. ஈகோ -Ego
  3. சூப்பர் ஈகோ- Super Ego
ஈட்- ID
ஈட் என்பது நமது உடல் தேவைகளைக் குறிக்கும். பசி, தாகம், பாலுணர்ச்சி போன்ற உள்ளுணர்வுகள் மனிதனுக்குள் மிருகங்களைப் போலவே இருக்கின்றன.
ஒரு மிருகம் எவ்வாறு தன் பசி, தாகம், பாலுணர்ச்சி ஆகியவையை உடனே திருப்திப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறதோ அதே போல மனித மனதிற்குள் ஈட் விரும்புகிறது.
மிக சின்ன வயதில் ஒரு மனித குழந்தையும் பசி, தாகம், தூக்கம் ஆகிய தேவைகள் உடனே திருப்திப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் பெற்றோர்கள மற்றும் குடுமபத்திலுள்ள உள்ள மற்ற உறுப்பினர்கள் அக்குழந்தைக்கு சுயக்கட்டுப்பாடு பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள்
குழந்தை பெற்றோர்களுக்கு பிடிக்காத ஒரு செயல் செய்யும்போது “வேண்டாம்! வேண்டாம்!” என்று பெற்றோர்கள் சொல்ல, குழந்தையும் அதே மாதிரி ஒரு செயல் செய்யும்போது தன்னையே ஞாபகப்படுத்துவதுபோல் “வேண்டாம்! வேண்டாம்!” என்று சில சமயம் சொல்வதை நாம் அனைவரும் பார்த்துள்ளோம்
சூப்பர் ஈகோ- Super Ego
நீங்களும் நானும் இருக்கிற இந்த நல்ல உலகத்தில் வாழ்வதற்கு சில பல நெறிமுறைகள் வேண்டும். இப்படிப்பட்ட ‘செய், செய்யாதே’ விதிகளை நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தரும்போது அது மனதில் பதிவாகிறது
நெறிமுறைகள் பதிந்திருக்கும் மனதின் இந்த பாகத்தை ஃப்ராயட் ஸுப்பர் ஈகோ என்ற பெயர் சூட்டுகிறார்.
ஈகோ- Ego
ஆகவே, ஈட்  ஒருபுறம் உடனடியாக ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று விரும்பும்போதுஸுப்பர் ஈகோ ஆசைகளை நெறிமுறைகளை பின்பற்றித்தான் நிறைவேற்ற வேண்டும் என்று உத்திரவிடுகிறது.அதாவது ஈட் டின் தேவைகளும் (ஆசைகளை உடனே பூர்த்தி செய்!) ஸுப்பர் ஈகோவின் தேவைகளும் (நெறிமுறைகள் அனுமதிக்கும்வரை காத்திரு!) முரண்படுகின்றன. இந்த முரண்பாட்டை சமாளித்து எது செய்ய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறது ஈகோ.
பிராய்டின் கருத்துப்படி மனிதன் கருத்தரிக்கும் போதே ஈகோவும் தரித்து விடுகின்றது. இந்த ஈகோ வளர்ச்சியே மனம் என்றாகிறது. இதன் அடிப்படை பணிகள் இரண்டு.
  1. புலனுணர்வு,
  2. அறிவுத் திறன்.
    இந்த உணர்வும் அறிவும் சேர்ந்துதான் மனித மனத்தை ஓர் ஒழுங்கு அமைவுக்கு ஆழ்த்துகின்றன. மனம் ஒழுங்குக்கு வர வர வாழ்க்கை ஒழுங்காகிறது.
நாம் ஒரு கடைக்குப் போகிறோம். ஐஸ்கிரீம் பார்த்து அதை உடனே சாப்பிட ஈடுக்கு ஆசை வருகிறது. ஸுப்பர் ஈகோ “வேண்டாம்! அது உன்னுடையது அல்ல. சமுதாய நெதிமுறைகளின்படி நீ இன்னொருவருக்கு சொந்தமான பொருளை உபயோகிக்கக் கூடாது” என்று தடுக்கிறது.
இரண்டின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நிர்ப்பந்தத்தில் இருக்கும் ஈகோ ஒரு நடுநிலை பாதையை கண்டுபிடிக்கிறது, அதாவது வீட்டுக்குச் சென்று காசு கொண்டுவந்து ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடுவது.இவ்வாறு ஈகோ எப்பொழுதும் ஈட்-யின் “உடனடி-திருப்தி” என்ற வற்புறுத்தலையும் ஸுப்பர் ஈகோவின் “சமுதாய நெறிமுறைகளை பின்பற்றாமல் ஆசை-பூர்த்தி கூடாது” என்ற வற்புறுத்தலையும் திருப்திபடுத்த ஒரு வழி தேடுகிறது.
சில உதாரணங்கள் ஈட்-ஸுப்பர் ஈகோ – ஈகோ ஆகியவற்றின் இணைந்த செயல்பாட்டை புரிந்துகொள்ள உதவும்:
உதாரணம் 1:
ஈட்: எனக்கு அந்த பெண்ணுடன் உறவு வேண்டும்
ஸுப்பர் ஈகோ: கூடாது. அவள் உன் மனைவி அல்ல/ உனக்கு சொந்தம் அல்ல
ஈகோவின் முடிவு: நான் நன்றாக உழைத்து ஒரு நல்ல பதவிக்கு வருவேன். அப்பொழுது அந்த பெண்ணைக் கல்யாணம் செய்து  உறவு கொள்வேன்.
இவ்வாறு, ஈகோ இரண்டையும் திருப்திப்படுத்த ஒரு நடுநிலை பாதை கண்டுபிடிக்கிறது.
உதாரணம் 2:
ஈட்: எனக்கு நிறைய பணம் வேண்டும். ஆகவே, எனக்கு உடனே நிறைய பணம் கொடு.
ஸுப்பர் ஈகோ: பணம் உடனேக் கிடைக்காதுஇன்னொருவரின் பணத்தை அபகரிப்பது சமுதாய நெறிமுறைகளுக்கு எதிரானது. அப்படி செய்யாதே!
ஈகோவின் முடிவு: நான் உழைத்து சமுதாய நெறிமுறைகளுக்கு உட்பட்டு பணம் சம்பாதிப்பேன்.
இன்னொரு உதாரணம்
ஈட்: எனக்கு இந்த இடத்தில் மரியாதை/முக்கியத்துவம் வேண்டும்!
சூப்பர் ஈகோ: வேலை/சாதனை செய்தவர்களுக்கே மரியாதை, இன்னொருவரின்  புகழ்/ மரியாதையை அபகரிப்பது சமுதாய நெறிமுறைகளுக்கு எதிரானது. அப்படி செய்யாதே
ஈகோ: இப்போது அமைதியாக இரு உனது நேரம் வரும்போது உனக்கானதை அடைவாய் !
இந்த உதாரணங்களில் நமக்கு மிக பொறுத்தமான ஒரு அம்சத்தைப் பார்க்கிறோம். அதாவது, சமுதாய நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஈகோவின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்போது நாம் அந்த பூர்த்தியை தள்ளி வைக்க வேண்டி வருகிறது. இதை உளவியலாளர்கள் postponement of gratification அதாவது திருப்தி-தள்ளி- வைப்பு என்று வர்ணிக்கிறார்கள். ( அடுத்த படிவுக்கு முன்னோட்டம் J )
இது இப்படியிருக்க ஈகோ பிடித்தவன் என்று சொல் வழங்கக் காரணமென்ன..? இதற்கு உளவியல் கூறும் விளக்கம் என்ன?
உளவியலில் ஈகோ(ego) எனும் சொல்லை நல்ல பொருளில் தான் கையாளப் படுகின்றது. மனத்தின் நனவு நிலையாக(conscious) உளவியல் கொள்கிறது. உடல் சார் புலனுணர்வு அது தொடர்பான புலனறிவு அதன் நீட்சியாக அறிவுத்திறன் ஆகிய தொகுதிதான்  ஈகோ.
மாறாக, ஈகோயிசம் (egoism) எனும் வேறொரு சொல்லை அது சுட்டுவதுண்டு. இதற்கு ஒரே பொருள் சுயநலம். தன்னைப் பற்றியே சிந்திபோரே ஈகோயிஸ்ட் ஆவார். அதோடன்றி, வரட்டுக் கௌரவம், தலைக் கணம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்கள் ஈகோயிசத்தில் அடங்கும்.இந்த எதிர்மறை குணங்களை சுட்டுகின்ற ஒரு தமிழ் சொல் – திமிர்
இவர்களிடம் அமைதியாகவும் மரியாதையாகவும் சகிப்புத்தன்மையோடும் இருங்கள். அவர்களுக்கு எதிராக நாம் செயல் பட்டால் அது அவர்களின் ஈகோவைக் கூட்டி விடும். பிறகு தவறான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். காலமும் புரிதலும் நல்ல உளவியல் ஆலோசனைகளும் நம்மை விட நன்றாகவே அவர்களுக்கு உதவும்.
ஆக ஈகோ நல்லது.. அதுசரி .. இனிமேல் யாரையாவது ஈகோ பிடித்தவர் எனத் திட்டுவீர்கள் ??!! :P

Bystander Effect : (பைஸ்டெண்டர் எபெக்ட்)

சில நாட்களுக்கு முன் ஒரு வணிக வளாகத்தில் ஒரு தற்கொலை. ஒரு இளைஞர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். விழுந்த அந்த இளைஞரை  போலீஸ் உட்பட யாரும் நெருங்கவில்லை – கிட்டத்தட்ட பதினைந்து நிமிடத்திற்கு… அதன் பின் யாரோ சிலர் முயன்று ஆட்டோ வைத்து அவரை கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். இதைதான் பைஸ்டெண்டர் எபெக்ட் என்பார்கள். கூட்டமாக ஒரு தவறைப் பார்க்கிறப் போது மனிதர்களின் தயக்கமான மனோபாவம் அவர்களை ஸ்தம்பிக்க வைக்கிறது. தனியாளாக இருக்கும்பொது உதவி செய்வார்கள் இவர்கள். ஆச்சரியமாக இல்லை ?
It is a social psychological phenomenon that refers to cases in which individuals do not offer anymeans of help to a victim when other people are present. The probability of help is inversely related to the number of bystanders – Wikipedia

Saturday, 25 October 2014

ஜென் கதைகள் 2


நீங்கள் ஏன் உங்கள் சைக்கிளை ஓட்டுகிறீர்கள் ? 

ஆஸ்ரமத்தின் ஐந்து சீடர்கள் சைக்கிளில் சந்தைக்கு சென்றுவிட்டு திரும்புவதை தலைமை குரு  ஐக்யூ  பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் ஆஸ்ரமத்தை அடைந்ததும் ஐவரையும் அழைத்தார் .
ஐவரையும் நோக்கி ” நீங்கள் ஏன் உங்கள் சைக்கிளை ஓட்டுகிறீர்கள் ? ” என்று வினவினார். ” அது எனது வேலைகளை எளிமையாக்குகிறது ஐயா ” முதலாமவன் பதிலளித்தான்.
அவனைத்தட்டிகொடுத்து ”நீ பெரிய அறிவாளி , நீ வயதானகாலத்தில் என்னைப்போல் கூன் விழாமல் நிமிர்ந்து நடப்பாய் ” என்றார் ஐக்யூ  .
இரண்டாவது சீடனோ ” நான் சைக்கிள் ஓட்டும்போது என்னால் இயற்கை அழகை எளிதாகவும் விரைவாகவும் ரசிக்க முடிகிறது ஐயா
அவனை அருகில் அழைத்து ” உன் கண்கள் திறந்திருக்கின்றன நீ உலகை ரசிக்கிறாய் ” என்றார்.
மூன்றாவது சீடன் ” ஐயா நான் பயணிக்கையிலும் கூட மந்திரங்களை ஜெபிக்க முடிகிறது ”
குரு தன் கண்கள் விரிய ” அடேயப்பா உன் புத்திக்கூர்மை வியக்கவைக்கிறது” என்று இரண்டு கைகளையும் சத்தமாக தட்டினார்.
நான்காவது சீடன் ” நான் சைக்கிளில் பயணிப்பதால் ஏகாந்த நிலையை அடைகிறேன் ஐயா ” என்றான்
ஐக்யூ  மனநிறைவோடு அவனை கட்டித்தழுவி ” நீ ஞானத்தை அடையும் பாதையில் பயணிக்கிறாயடா ” என்றார்.
ஐந்தாவது சீடன் நீண்ட அமைதிக்குப் பின் ” என் சைக்கிளை ஒட்டுவதற்காக என் சைக்கிளை ஒட்டுகிறேன் ஐயா! ” என்றான் .
ஐக்யூ அவன் காலில் விழுந்து ” ஐயா, என்னை மன்னியுங்கள் , நீங்கள் என் சீடனாக இருக்க முடியாது , நான்தான் உங்கள் சீடன் ” என்றார்.
**************************************************
இந்த மென் பொருள் வேலைக்கு வந்ததற்குப் பிறகு பல நேரங்களில் வருகிற சந்தேகம் நாம் என்ன செய்கிறோம். எதை யொ நினைத்து எதையோ செய்து வேறொன்றை விற்கிற நிலைமைத்தான்..
சமகாலத்துக்கு பொருந்திப் போகிற கதை..
சாப்பிடுகிற நேரத்தில் சம்பளத்தையும் வேலை செய்கிற நேரத்தில் வேறு எதையாவதையும் நினைத்து கொண்டே எல்லாவற்றையும் கோட்டை விடுகிற மனோபாவம் நமக்கே நமக்கென இருக்கிற வரம்.
என்ன செய்ய ?

ஜென் கதைகள் 1

கவனி!கவனி!!


ஐக்யூவை ஒரு மனிதன் அணுகி “ உங்களது பெரிதான ஞானத்திலிருந்து சில வார்த்தைகளை எழுதித் தர முடியுமா?” எனக் கேட்டார்.
ஐக்யூ தனது எழுதுகோலை எடுத்து “ கவனி” என எழுதினார்.
“இவ்வளவுதானா?” இது வந்தவர்.
ஐக்யூ திரும்பவும் “கவனி, கவனி” எழுதினார்.
“நல்லது” என சொல்லியபடியே “இதிலே ஒன்றும் ஞானத்தின் ஆழம் இருப்பதாக படவில்லை குருவே” என இழுத்தார் நம்மவர்.
இப்போது ஐக்யூ திரும்பவும் மும்முறை எழுதினார். “கவனி, கவனி, கவனி”.
இப்போது அந்த மனிதன் கோபம்மேலிட்டவனாய் “அப்படி அந்த கவனி என்ற வார்த்தைக்கு என்னதான் அர்த்தம் ? “ என கத்தினார்.
“ ‘கவனி’ என்றால் ‘கவனி’ எனப் பொருள்” என்றார் ஐக்யூ.
- Source The Little Zen Companion


இன்னுமா சுமந்து கொண்டிருக்கிறீர்?


கடும் மழை நாளிலே, ஐக்யூ சங்கூ என்ற இரண்டு சென் குருக்கள்  ஒரு சேறும் சகதியுமான சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள். சாலை முழங்கால் மட்டம் சேறால் நிரம்பியிருந்தது. பட்டாடை உடுத்தியிருந்த ஒரு பெண் சாலையைக் கடக்க முடியாதவளாய் நின்றிருந்தாள். ஐக்யூ “வா பெண்ணே” என அழைத்து அவளை தோளில் சாய்வித்தவராய் சாலையைக் கடக்கும் மட்டும் கொண்டு விட்டார். சங்கூ எதுவும் பேசவில்லை. அமைதியாக வந்தவர் இரவு தங்கும் விடுதியை அடைந்த உடன் ஐக்யூவிடம் “ அது எப்படி ஒரு சென் குரு அதுவும் வயதில் குறைந்தவர் ஒரு வாலிப பெண்ணை தொட்டு தூக்கலாம்? “ என வினவினார்.
ஐக்யூ பதிலுக்கு “நான் அவளை அங்கேயே இறக்கி விட்டுவிட்டேன. ஆனால் நீங்கள் இன்னுமா சுமந்து கொண்டிருக்கிறீர்? “



Saturday, 18 October 2014

மனம் - புரிதலும் புரிதல் நிமித்தமும் 2

உள்ளும் புறமும் - 2
புரிதலும் புரிதல் நிமித்தமும்  2
"ஐயோ ! ஸாரிங்க,, தெரியாம பண்ணிட்டேன்!!"
"நான் ஏன் இப்படி பண்ணேன்னு எனக்கே தெரியல ?"
"எனக்கு என்னமோ ஆயிடுச்சு .."
"அவர் ரொம்ப தங்கமானவர் தான்.. ஆனா கோவம் வந்தா என்னப் பண்றோம்னு அவருக்கே தெரியாது .. அப்படிதான் போன வாரம்  . #@%$#,,,"
"ஐயோ அவர் அப்படிப்பட்ட ஆளு இல்லிங்க!! என்ன ஆச்சுனே தெரில திடிர்னு பைத்தியம் புடிச்ச மாறி நடந்துகிட்டார் ?"
இந்த மாதிரி வரிகளை உங்கள் காதுகள் தினம் தினம் கேட்டு இருந்திருக்கும்
அட ஏங்க.. எத்தனையோ சமயங்களில் நாமே  ஒரு மாதிரி நடந்துக்கொண்டு  " அடடா  இப்படி பண்ணிட்டோமே ! நாம ஏன் இப்படி நடந்துகிட்டோம்நு ?? !! "ஆச்சரியப்பட்டிருப்போம் ..

“மனிதன் ஒரு தர்க்க சக்தியுள்ள பிராணி” என்று உலகமே நம்பியிருந்தற்கு மாற்றாக வேறொன்றை ஒரு நல்ல நாளில் விவரமாக விளக்கினார் ஒரு வயதான வாலிபர். நம்மவர் ஸிக்மண்ட் ஃப்ராயட் என்ற உளவியலாளர். அப்படி என்னதான் சொல்லியிருப்பார் இந்த மனிதர் ?

மருத்துவ படிப்பை படித்துவிட்டு மனநோயாளிகளுக்கு சிகிட்சை பார்த்து கொண்டிருந்த ப்ரோய்ட்க்கு ஒருவர் மனநோயாளி ஆவது பற்றி ஏன்? எதற்கு? எப்படி என்பது போன்ற கேள்விகள் வந்தது. ஆரம்பித்தார் ஆரய்ச்சியை.

அவரது ஆராய்ச்சியின் அடிப்படையில் அவர் ஒரு மிக முக்கியமான முடிவுக்கு வந்தார் — நாம் சிறு குழந்தையாக இருக்கும்போது நடந்த சில முக்கியமானசம்பவங்கள் நமக்கு வயது வந்த பின் நமக்குத் தெரியாமலேயே நம்மை இயக்குகின்றன. சிறு வயதில் நடக்கும் சமபவங்களை நாம் மறந்துவிட்டோம் என்றுநாம் நினைத்தால்கூட நமக்கு தெரியாமல் அவை நமது ஆழ்மனதில் பதிந்திருந்து நம் சிந்தனைகளை இயக்குகின்றன.இத்யாதி இத்யாதி விசயங்கள் ..

சுருங்க சொல்லுவோமானால்,
நம் எல்லோருக்கும் மனதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன.
1. வெளிமனம்- நினைவு மனம் - புறமனம். (Conscious Mind)
2. உள்மனம் - ஆழ் மனம், சப் கான்ஷியஸ் மைண்ட். (unconscious Mind )
சரி விஷயதுக்கு வருவோம். மனிதனிடம் உள்மனம் வெளிமனம் என இரண்டு மனம் இருக்கின்றது என கூறினேன். எதுக்கு இரண்டு மனம் ஒன்று பத்தாதா? என நீங்கள்  நினைக்கலாம்.. எதற்குமே காரணம் இல்லாமல் இல்லை இரண்டிற்குமே தனி தனி  வேலைகள் இருக்கின்றது.
இந்த வெளிமனம், வெளியுலகோடு நாம் செம்மையான முறையில் தொடர்பு கொள்ளவும் அன்றாட வாழ்வை நாம் தொந்தரவில்லாமல் வாழவும் செயல்படுகிறது. நாம் பார்க்கிற கேட்கிற சாப்பிடுகிற மசாலாக்களை கட்டுப்படுத்துவது வெளி மனம்.  எங்கே எதை எப்படி பேச பழக செய்ய வேண்டும் என்பதிலிருந்து எல்லா விஷயங்களையும்  பொறுப்பாக பார்த்து கொள்கிற நல்லவர் இவர்.  பயம் வெண்டாம் ..

நம் அன்றாட வாழ்கையில் நடைபெறுகின்ற செயல்களை சேமித்து வைக்கின்றது.  ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நிலைத்து வைத்திருக்காது.தனக்கு தேவையானதை தவிர மற்றதை காலப்போக்கில் மறந்து விடும்.  தர்க்கவியலானது ,பகுப்பாய்வு செய்யும் ,பகுத்தறியும்(logical ,analyze,rational) தன்மை கொண்டது. வெளிமனம் என்று ஒன்று இருப்பதால் தான் நாம் நமது  வாழ்கையில் நடந்த துக்கமான நிகழ்வுகளையும் ,அவமானங்களயும் மறந்து சகஜமாக  வாழமுடிகின்றது.. என்ன சொல்கிறீர்கள்?.

உள்மனம் என்பது நாம் பிறந்தது முதல் இந்தக்கணம் வரை நம் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களின் பதிவுகளையும் அடக்கியது. ( இது எப்படி சாத்தியம் ?.. நினைவுகள் பற்றிய பதிவில் பார்க்கலாம் ) உள்மனதின் சக்தி அபாரமானது. உதாரணமாக கடலில் மிதக்கும் பனிப்பாறை சிறிது மட்டும் வெளியே தெரியும். அது வெளிமனம். ஒரு மலையளவு பனிப்பாறை கடலுக்குள் மூழ்கியே இருக்கும் அது உள்மனம். இதை ஐஸ் பெர்க் அனாலஜி என்பார் ஃப்ராய்ட்.
உள்மனம் தூங்குவதில்லை. வெளிமனம் கண்மூடித் தூங்கும்போதும் உள்மனம் விழித்திருந்து வேலையை செய்கிறது . தூக்கத்திலும் கூடி மௌனமாக இயங்கி நம்மைக் காப்பதும் இதுவே.
உடலுறுப்புகள் முக்கியமாக உள்ளுறுப்புகள் வெளிமனதின் அறிவுக்கு அப்பாற்பட்டுத்தான் இயங்குகின்றன. இதயம் துடிப்பதும், மூச்சு விடுவதும் குடலும் வயிறும் சிறுநீரகமும் இயங்குவதும் அறிவுக்குக் கட்டுப்படா? வெளிமனம் உறங்கும்பொழுதும் இவை தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. உள்மனமே பயத்திலே மார்பைப் படபடக்க வைக்கிறது. உள்ளங்கைகளில் வேர்வையை ஆறாய்ப் பெருக்குகிறது. தொண்டை அடைக்கிறது.

புகைத்தல்,மது , இனிப்புப்பண்டம் சாப்பிடுதல் , அடிக்கடி சாப்பிடுதல் ,நிகம்கடித்தல் போன்றவை ஆள்மனதில் பதிந்து இருக்கும் உள்மனமே நினைவுகளின் கருவூலம். நாம் பிறந்தது முதல் இன்று வரை நாம் அடைந்த அனுபவங்கள், அனுபவித்த அதிர்ச்சிகள், சோகங்கள், பயங்கள், சந்தோஷங்கள் எல்லாமே இந்த உள்மனம் என்னும் வங்கியில் இருக்கின்றன

ஒருவர் கண்ணாடி போட்டிருந்தாலும் அவரது கண்ணிற்கு கிட்ட கையைக் கொண்டு சென்றால் கண்ணை உனனே மூடுவார் ,ஒரு பெண் முழுக்காற்சட்டை ஆணிந்து சென்றாலும் காற்று வீசும் போது கையால் கீழ் உடுப்பை அழுத்துவார் , நெருப்புச் சுடும் பொழுது கையை எடுத்தல் ,பனியில் சறுக்கும் பொழுது கையை பின்னே  ஊன்றுதல் போன்றன இந்த உள்மனது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு (Free from logical ,analyze, rational thinking) செயல்படுவதை விளக்கும்.
நம் உள்மனதில் இருந்து கொண்டே நம் சிந்தனைகளைப் பாதிக்கும் நமது குழந்தை பருவ ஞாபகங்களை தெரிந்துகொள்ள ஒரு வழிமுறையை ஃப்ராயட்கண்டுபிடித்தார். அந்த வழிமுறைதான் உளப்பகுப்பாய்வு (Mental Analysis ).

ஃப்ராயட் கொடுத்த கருத்துக்களும் மனநோயாளிகளை குணமாக்கும் வழிமுறைகளும் உளவியல் பற்றிய எண்ணங்களை பெரிதும் பாதித்தன. மனிதனைஇயக்கும் உள்மனம் அவர் கட்டுப்பாட்டுக்கு அடங்காதது என்ற எண்ணம் மனிதனின் தன்னைப் பற்றிய கருத்தை மாற்ற செய்தது. “மனிதன் அறிவு மிகுந்தபிராணி.”
ஆழ்மனதினைப் பற்றிய ஒரு அறிமுகப்படுத்துதே இப்பதிவின் நோக்கம் .. அதனால் இதோடு நிறுத்திக் கொள்வோம்.

New Intro for the Post

அதிசய எண் 21: ஒரு செயல் பழக்கமாக எத்தனை நாள்கள் தேவை? 21 என்கின்றனர் உளவியல் அறிஞர்கள். தொடர்ந்துஒரு செyal 21 நாட்கள் செய்யப்படுகிறபோது அது பழக்கமாகிறதாம்.  உதாரணமாக "அதிகாலை எழுதல்" என்பதைக் கொண்டால். அதை 21 நாட்கள் வலுக்கட்டாயமாக நீங்கள் கடைபிடிக்க வேண்டும்(கடிகாரத்தின் அல்லது கட்டிய/கட்டப்போகிறவர்கள் உதவியோடு). 21 நாட்கள் நீங்கள் தொடர்ந்து செய்து விட்டால் 22 ஆம் நாள் நீங்கள் தானாகவே அதிகாலையில் கடிகார அழைப்பு இன்றி எழுந்து விடுவீர்கள். கடிகாரமே உங்களிடம் கேட்டுக் கொண்டுதான் மணி எழுப்பும்..
சரி சரி ..வழக்கம்போல இதுவும் ஹோம் வொர்க்தான்.. Enjoy ..:) ( Introduced by William James, Psychology Professor Harvard University)
–சகாயா

Thursday, 18 September 2014

ஹிட்லர் - பா.ராகவன்

ஹிட்லர் - பா.ராகவன்

முன் மாதிரித் தலைவர்களைப்( Role Model )பற்றிப் பேசும்போது என் நண்பர்கள் அடிக்கடி சொல்கிற ஒரு வாக்கியம். "எனக்கு காந்தியைப் பிடிக்காது.. ஹிட்லர் தான் என்னைக் கவர்ந்தவர் " என்பது.ஹிட்லர் என்கிற மனிதன் இன்றைய இளைஞர்களுக்கு ஆதர்ச தலைவனாகவேத் தெரிகிறார்..

ஆமாம்.சும்மாவாப் பின்னே ..

 ஒரு சாதாரண சிறுவன் சர்வாதியாகிற விஷயம் நிச்சயம் அலாதியானதே!!இயல்பாகவே ஹிட்லர் என்ற உருவத்தின் மீது அல்லது படிமத்தின் மீது ஒரு கவர்ச்சி இருக்கும்.. இது ஒரு பொதுவான மனோ நிலை. இளைஞர்களுக்கு இயல்பாகவே சாகசம் மற்றும் குறுகிய  கால வளர்ச்சியில் ஒரு ஈர்ப்பும் நம்பிக்கையும் இருக்கும். ஹிட்லர் சம காலத்துக்கு சற்று முந்திய ஒரு உதாரணம் அவ்வளவே ..

சரி விசயத்துக்கு வருவோம் ..

எனக்கும் ஹிட்லரின் மீது ஒரு கிளர்ச்சி இருக்கத்தான் செய்தது. அவரைக்குறித்து அதிகம் வாசித்திருக்கிறேன். அந்தவகையில் ரொம்ப நாள் ஆசைப் பட்டு இப்போது தான் கிடைத்த ஒரு புத்தகம்

" ஹிட்லர் - பா.ராகவன்"

வியன்னாவின்  தெருக்களில்  ஓவியம் வரைந்து கொண்டிருந்த ஒரு சிறுவன் பிற்காலத்தில் ஐரோப்பாவின் வரைபடத்தை மாற்றி வரைவார் என்பதை உலகம் தெரிந்து வைத்திருக்கவில்லை ..ஒரு தனிமனிதனின் பேச்சுத் திறமையால் தகவல் தொடர்பு பணியிலிருந்து மகாப் பெரிய ஜெர்மன் தேசத்துக்கு தலைவராக முடியும் எனத் நிருபித்துக் காட்டியவர் ஹிட்லர் ..
இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது..
நல்ல ஓவியர்.. திறமையான பொறியாளர் (volkswagen டிசைன்), அருமையான பேச்சாளர்.. தலைவர், பிறவி சர்வாதிகாரி, ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் பயமுறுத்தி அடக்கி வைக்கும் திறமை அவருக்கு வாய்த்திருந்தது . இதெல்லாம் இருந்தாலே போதாது …அவர் திறமையான அரிசயல்வாதிதானே ?
ஜெர்மனி முதலாம் உலகப்போரில் சரண் அடைந்தது. “கம்யூனிஸ்ட்களும் யூதர்களும் தான் ஜெர்மனியின் தோல்விக்கு ரகசியமாக வேலை செய்தார்கள். அவர்களை அழிக்காமல் விடமாட்டேன்!” என்று தனது குட்டி மீசைக்கு கீழிருந்த வாயிலிருந்து வார்த்தைகளை உதிர்த்தார் ஹிட்லர் .. சரியாய் அன்றையிலிருந்து அழிவுகள் ஆரம்பித்தன ...
தனது சிறு வயதில் தான் பார்த்த யூத/கம்யூனிச  ஆக்கிரமிப்பின் காரணமாக தன் பன்னிரண்டு வரு ஆட்சியில் பதினோரு மில்லியன் மக்களை கொன்று கின்னஸ் சாதனைப் படைத்தவர்.. அதிலும் குறிப்பாக யூத மக்களில் ஆறு மில்லியன் மக்க்களைக் கொன்று குவித்தவர்.. அவரது நாஜிப்படைகளின் concentration Camp ( விஷ வாயு முகாம்கள்) பற்றி படித்தவர்கள் கண்ணீர் விடாமல் இருக்க முடியாது .. கொடூரத்திலும் கொடுரம் ...

1035 பக்கங்கள் கொண்ட ‘அடால்ப் ஹிட்லர்’ என்ற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் ஜான் டோலேன்ட், “ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நாலாவது ஆண்டில் எதாவது காரணத்தால் இறந்திருந்தால், உலகமே ஹிட்லரை “ஜெர்மனியின் சரித்தரத்தில் தோன்றிய மிகச் சிறந்த மாமனிதன் என்று பாராட்டியிருக்கும்!” என்று கூறுகிறார்
ஒரு புத்திசாலி சாடிஸ்ட் ஆக மாறினால் மிகவும் ஆபத்தான ஒன்றுதான். ஆனால் ஹிட்லர் என்னும் சாதனையாளன்… செய்த சாதனை என்ன தெரியுமா?.  ‘ஜெர்மனி’ என்ற ஓர் நாட்டையே ‘சாடிஸ்ட் நாடு’ ஆக மாற்றினான் என்றால் அது மிகையில்லை.

ஹிட்லர்-இன் காலத்தில் அவரின் பெரும் முயற்சியால் ஜெர்மனி ராணுவத் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்திருந்தது. பல வலி நிவாரணிகளும், போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து வெளிவர  உதவும் மருந்துகளும், ஹிட்லர்-இன் கடும் முயற்சியால் கண்டுப் பிடிக்கப்பட்டன. இரக்கமும், மனிதமும் துளிர்த்த சில இடங்களிலும், ஹிட்லர் பற்றிய பயம் அதிகமாக இருந்தது, ஹிட்லர் ஏதோ நெருக்கமாக நின்று தங்களை உற்று கவனிப்பது போன்ற அச்சமும் நடுக்கமான நம்பிக்கையும் அனைவரிடமும் பீடித்து இருந்தது..

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .. இவர் நல்லவரா இல்லை கெட்டவரா என்ற பட்டிமன்றம் முடிவதற்குள்   இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு எட்டியிருந்தது. ஒரு நல்ல நாளிலே "காதலியுடன் ஹிட்லர் தற்கொலை" என்ற செய்தி வெளியிட்டார்கள் பத்திரிக்கைக்காரர்கள்..
உலகம் பெருமூச்சு விட்டது..

அதற்குப் பின் உலகமே ஜெர்மனியைப் பங்கு போட்டு பெர்லின் சுவர் எழுப்பி ஜெர்மனியை உண்டு இல்லாமல் பண்ணியது வேறு கதை .

இப்படி பக்கத்துக்கு பக்கம் திருப்பங்கள் வாய்ந்த ஹிட்லரின் வாழ்க்கையை நிஜத்துக்கு சற்றும் குறையாத விஹ்ததில் பதிவு செய்திருக்கிறார் பா. ராகவன் . எள்ளல் நடை.. மழி ஆளுமை நிச்சயம் சரித்திர புத்தகம் என்கிற நினைப்பை தராது..

வாசிக்க முடிந்தால் வாசித்துதான் பாருங்களேன்!








Tuesday, 9 September 2014

மனமது செம்மையாயின் .... – 1


(புரிதலும் புரிதல் நிமித்தமும் 1 )
"என்னன்னே தெரியலங்க! மனசு ரொம்ப பாரமா இருக்கு .. ஒரு பத்து நாள் லீவப் போட்டுட்டு எங்கேயாவது போயிடலாம்நு இருக்கு.. "  இந்த வரிகள் நாம் அடிக்கடி கேட்கிறவை. ஏன்உங்களுக்கும் கூட சில பல நேரங்களில் தோன்றியிருக்கும் இல்லையா ?
எஸ்
நோ
மேபி ..

இதை Depression என்றோ மனக்குழப்பம் என்றோ... சரி உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் premenstrual syndrome  என்றோ  முடிவுக்கு வருவதற்கு பல பதிவுகள் நான் போட வேண்டியிருக்கும் .அதை வருங்கால Action Item ஆக வைத்துக் கொள்ளலாம்.





மனம் என்கிற விஷயத்தை கூகுளில் தேடினால் போதும் நம்மைப் போலவே அதுவும் "ஆன்மா" "குண்டலனி" என ஏதோ நமக்கு சம்பந்தமில்லாத விஷயமாக நினைத்துக்கொண்டு தேடல் முடிவுகளைத் தருகிறது . உங்களையும் என்னையும் போலவே 'மனம்' மனது' 'mind ' என்கிற விசயத்தில் கூகுளும் குழம்பி போனதில் குறையொன்றும் இல்லை .

காலையில் கண்விழிக்கும்போதே நேற்று நம்மை திட்டிய மேலாளரை நினைத்துக் கொண்டே எழுந்திருக்கிறோம். பல் விளக்கும்போது எப்படி இருந்தாலும் அவர் எப்படி நம்மை அப்படி சொல்லலாம் ? அவர் மட்டும் சரியா செஞ்சாரா? என்றக் கருத்தை ஏற்று கொண்டு கழுவி ஊற்றுகிறோம் வாஷ் பேசினில். குளிர்ந்த தண்ணிர் முகத்தில் பட்டு முதுகில் வழிகிற குளிர்ந்த  தருணத்தில் இன்னைக்கு திருப்பி கேட்டிடனும் என்று உணர்ச்சி வசப்பட்டு துடைக்கிறோம்  நம்மை .. தோசையை பிட்டு வாயிலே வைக்கிற போது நமக்குள்ளேயே மசாலா சேர்த்து அந்த நிகழ்வைக் கற்பனை செய்கிறோம். டிராபிக்கில் நிற்கிறப் போது நாம் செய்வது சரி என்று நமக்கு நாமே நியாயம் சொல்லிக் கொள்கிறோம்

ஆக மொத்தம் நேத்து திட்டனதுக்கு நியாயம் கேட்கிற இந்த மகா பெரிய ஒரு காரியத்துக்கு  மனது என்கிற சமாச்சாரம் பல வழிகளில் செயல்பட வேண்டியிருக்கிறது

சரி நாம் ஒரு முடிவுக்கு வருவோம்  மனம் என்பது நமது சிந்தனை, கருத்து,  உணர்ச்சி, கற்பனை, நியாயம் போன்ற அறிவு(Intellect ) மற்றும் உணர்வு சார்ந்த விஷயங்களின் தொகுப்பாகிறது.
மனிதனின் செயல்களை எப்படி புரிந்து கொள்ள முடிவதில்லையோ அப்படியே மனதையும் புரிந்துக்கொள்ள முடிவதில்லை
நவீன அறிவியலுக்கு முற்பட்ட காலங்களில் மனம் இறையியலை சார்ந்து ஆன்மா முக்தி என முத்திரையிடப்பட்டு இருந்தது. நம் காலத்திலோ 'மூளை'பற்றின புரிதலின் அடிப்படை எனவும் கான்சியச்னஸ் என்பதற்கு ஈடாகவும் பயன்படுத்தப் படுகிறது என்றாலும் இரண்டுமே தவறு என்பது மட்டும் 110% சரி !!!
நிற்க, இதுவரை படித்ததிலே மனம் என்பது முக்கியமானது என்றும் அதன் நலம் அத்தியாவசியமானது என்றும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்

ஒரு ஐந்து பத்துக் கேள்விகள் கேட்டு உங்களை ஆம் இல்லையென சொல்ல வைக்காவிட்டால் அது மனவியல் சார்ந்த கட்டுரை இல்லை என்ற போது வழக்கத்துக்காக ஒரு 5 கேள்விகள்
1. இன்றைக்கு என்ன தேதி, என்ன கிழமை என்பதை மறந்து விடுகிறீர்களா ?
2. நீங்கள் குளிப்பதற்கு சமீபமாக அதிக நேரம் எடுத்து கொள்கிறிர்களா?
3.பர்சில் பணம் வைத்தோமா இல்லையா என திரும்ப திரும்ப யோசிக்கிறிர்களா?
4.உங்கள் டீமில் எல்லாரும் நீங்கள் இல்லாத போது உங்களை பற்றி பேசிக்கொள்வது போலத் தெரிகிறதா ?
5.மிக வேகமாக ஒரு வேலையை செய்து முடித்து விட்டு சின்ன சின்ன தவறுகளுக்காக திட்டு வாங்கி இருக்கிறிர்களா ?
இதற்கு ஆமென்றோ இல்லை இலயென்றொ பதில் சொல்லி இருக்கலாம் தவறு ஒன்றுமில்லை. இந்த விஷயங்கள் எல்லாம் வயது, சூழ்நிலை, மறதி மற்றும் கவனமின்மையின் வெளிப்பாடுகளே.. இது மனதின் ஒரு சில செயல்பாடுகளின் தோல்வியே.
இதையும் தாண்டின சில அடிப்படைஉலவியல் சார்ந்த விஷயங்கள் உண்டு. நாம் தினமும் உச்சரிக்கிற வார்த்தைகள். அவைகளைக் குறித்த காரியங்களை வருகிற தொடர் பதிவுகளில் பார்க்கலாம்

Message for the Post
நம் உடலில் சர்கடியன் கடிகாரம்( Circadian clock ) ஒன்று உண்டு.. வெளிப்புற பகல் இரவு மாற்றத்திற்கு ஏற்ப  மனித உடலின் உயிரி-வேதியல் மாற்றத்தை ஒருங்கிணைக்கிற ஒரு சமாச்சாரம் அது.. உயிரியல் கடிகாரம் என்று வைத்து கொள்ளுங்களேன்...  மனித உடல் இதற்கேற்ப தன்னை அமைத்து கொள்கிறது. நீங்களே யோசித்து பாருங்கள்! .. சரியா 8 மணிக்கு பசிக்க ஆரம்பிக்கும். சிலபேருக்கு சரியா 1 மணிக்கு தூக்கம் வரும் ( மதியமா இரவா உங்கள் சாய்ஸ் ). இதெல்லாம் சர்கடியன் கடிகாரம் பண்ணுகிற வேலை. 

கூகுளில் இன்னும் துருவிப் போனிர்கள்  என்றால், பக்கம் பக்கமாக வாசிக்க கிடைக்கும். ஹோமே வொர்க் இது

Wednesday, 27 August 2014

நீ அன்னை தெராசா போல வாழ வேண்டாம் !!

நீ அன்னை தெராசா போல வாழ வேண்டாம் !!

1997 ஆம் வருடம் ஒரு நாள் நான் படித்த புனித மரியாள் துவக்க பள்ளியின்  காலை வணக்க கூட்டத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த சொன்னார்கள். அன்னை தெராசா என்கிற ஒரு நல்ல மனிதர் மறைந்து விட்டார் என செய் ‘தீ’த் தாள்கள் சொல்ல ஆரம்பித்தன..

அதற்கு முன்பே அவரைப்பற்றி கேள்விப் பட்டிருந்தாலும் ,இரண்டாம் வகுப்பு படித்த எனக்கு அப்போது தெரிந்ததெல்லாம் குட்டையான உருவம்  முகம் சுருங்கிய ஒருவர், நிறைய கருணை உள்ளம் கொண்ட ஒரு சகோதரி.. அதற்கு பின்னர் வேகமாக படிக்க ஆரம்பித்த நாட்களில் இவரைக் குறித்து அதிகம் படிக்க ஆரம்பித்தேன் . வெறும் பேச்சுக்காக அன்னைதெரெசா என ரோல் மாடல் என சொல்லுவதைக் காட்டிலும் அவர்களை போல மாற முயற்சித்தாலே நல்லது என்பதை தெரிந்து கொள்ள சில காலம் எடுத்தது உண்மை தான்!!

அன்னை தெரசா என உலகம் முழுவதும் உள்ள மக்களால் பாசத்துடன் அழைக்கப்பட்ட இவரின் இயற்பெயர் எக்னஸ் கோஞ்சா பொயாஜியூ(Anjezë Gonxhe Bojaxhiu).( சிறுமலர் என்று  அர்த்தம்   )
யுகோஸ்லோவியாவின் ஒரு பகுதியாக இருந்த மாசிலோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்ஜே (Skopje) நகரில் 1910-ஆம் ஆண்டு அன்னை தெரசா பிறந்தார். ஆகஸ்டு 26-ஆம் நாள் தெரசா பிறந்ததாகச் சில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், தமது பிறந்த நாள் ஆகஸ்டு 27-ஆம் நாள் தான் என்பதைத் தெரசாவே உறுதிபடுத்தியுள்ளார்.( அவருக்கு ஞானஸ்நானம்(Baptism) செய்யப்பட்ட ஆகஸ்ட் 27-ம் தேதியைத்தான் தன்னுடைய உண்மையான பிறந்த நாள் என்பார்!)
1922-ஆம் ஆண்டில் தனது 12-ஆவது வயதில், வறுமையால் வாடும் மற்றவர்களுக்காகத் தனது வாழ்வை ஒப்படைத்துக் கொள்ள முடிவு செய்து கொண்டார்.தொண்டுக்காகப் பிறந்தவள் தான் என்பதை உணர்ந்த தெரசா, 1929-ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு வந்தார். அடுத்த 68 ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண்.தொடக்கத்தில் அவர் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1946-ஆம் ஆண்டு  டார்ஜிலிங்கிற்குத் தொடர்வண்டியில் சென்று கொண்டிருந்த போது, சேரியில் அல்லல்படும் வறியவர்களுக்குத் தொண்டாற்ற வருமாறு உள்ளுணர்வு அழைத்ததன்படி, இந்தக் கடமையை நிறைவேற்றப் பள்ளியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இதற்கு அனுமதி கிடைத்தது. உடனடியாக முதல் உதவி மருத்துவத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டு சேரி மக்களுக்குத் தன் தொண்டைத் தொடங்கினார்.
1948 ஆம் ஆண்டு  இந்தியக் குடியுரிமைப் பெற்று நீல வெள்ளைப் புடவையுடுத்தி பணி செய்யத் தொடங்கினார்.
தெரசாவின் தொண்டு உள்ளத்தைக் கண்ட சகோதரிகள் ஒருவரைத் தொடர்ந்து ஒருவராக அவருடன் பணியாற்ற இணைந்ததால் கருணை இல்லம் (’மிஷினர் ஆப் சேரிடிஸ்’) என்னும் சமூகத் தொண்டு அமைப்பை உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து ஆதரவற்றவர்களுக்கு அன்னையாகத் தெரசா திகழ்ந்தார்.
சமூகத்தில் கைவிடப்பட்டவர்களான தொழு நோயர்களையும் சாவின் விளிம்பில் கிடந்த பிச்சை எடுப்பவர்களையும் தெரசாவும் அவரது அமைப்பினரும் தேடிப்பிடித்து உதவினர். மற்றவர்களால் மறுக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு தரும் இடமாகத் தெரசாவின் அமைப்பு விளங்கியது. தெரசாவின் கருணை உள்ளத்தால் உருவான அந்த அமைப்பு பல நாடுகளிலும் பரவியது.
இதற்குப் பின்னால் வந்த விருதுகளும் அந்த தொண்டுகள் வளர்ந்த விதமும் கூகுள் உங்களுக்கு சொல்லித்தரும். அது சொல்லாத சில விஷயங்கள் உங்களுக்கு ,
  1. 27 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவரைப்பற்றி ஆங்கில மொழியில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்து இருக்கின்றன. 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன!
  2. ‘ஒவ்வொரு மனிதரிடத்திலும் நான் கடவுளைக் காண்கிறேன்; ஒரு தொழுநோயாளியைத் தொடும்போது இறைவனையே தொடுவதுபோல் உணர்கிறேன்’ என்பது இவரின் புகழ் பெற்ற வாசகம்!
  3. தன்னைச் சார்ந்தோருக்கும், தன் அறக்கட்டளைகளில்! இருப்போருக்கும், கிறிஸ்துவ மதகுருமார்களுக்கும், இன்ன பிற நண்பர்களுக்கும், 66 ஆண்டுகாலமாகத்தான் எழுதிய கடிதங்களை அழித்துவிடச் சொன்னார். அதற்கு இவர் சொன்ன காரணம், `மக்கள் இந்தக் கடிதங்களை அறிய வரும் பட்சத்தில் இயேசுவைவிட என்னை மேலாக எண்ணிக்கொள்வார்கள்.’ இவர் மறைவுக்குப் பிறகு, இவர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு `மதர் தெரசா –கம் பி மை லைட்’ என்ற பெயரில் வெளிவந்தது!
  4. `சம்திங் ப்யூட்டிஃபுல் ஃபார் காட்’ என்ற படம் இவரின் புகழை உயர்த்தியது
  5. அவரைப் புகழ்ந்தவர்களிடம், ”கடவுள் கை காட்டிய கடமையைச் செய்கிறேன்’’ என்று புன்னகையுடன் விடையளித்தார்
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது .. சில வருடங்களுக்கு பிறகு இன்னொரு சகாலை வணக்கக் கூட்டத்தில் பேசிய தமிழய்யா எங்களுக்கு பின்னால் வரையப்பட்டிருந்த காந்தியை, அன்னைத் தெரசாவை சுட்டிக்காட்டி “நீ அன்னைத் தெராசாவைப் போல வாழ வேண்டாம் ! நீ காந்தியை போல வாழ வேண்டாம் !!….  நீ அவர்களைப் போல வாழ முயற்சி மட்டும்  செய் அதுவே நீ சமுகத்துக்கு   செய்கிற ஆகப்பெரிய காரியம் “  என்று சொன்னார்.. அன்றைக்கு புரியாமல் ஆச்சர்யப்பட்ட எனக்கு அது புரிய சில வருடங்கள் பிடித்தது

அன்னை தெராசா – ஒரு ஏமாற்று பிம்பம் என்பவர்களுக்கு
அன்னைத் தெரசாவைத் தூற்றிய அனேகப் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். உண்மையோ என யோசிக்கக் கூட ஆரம்பித்திருக்கிறேன் ..ஆனாலும் கூட எல்லா சவுகர்யங்களையும் விட்டுவிட்டு யாருமே இல்லாத நிலையில் யாரென்றே தெரியாத மக்களைத் தொட்டு தூக்கிட முடிவு செய்த /அந்த முடிவை எடுக்க முடிந்த அன்னையின் துணிச்சலுக்கு ஒரு சலாம் நிச்சயம் உண்டுங்க .. நிச்சயம் உண்டு.. உங்களாலயும் என்னாலயும் முடியறது இல்லையே!

கடைசியாக,  நாம். நமக்கு வேண்டியவர்களிடமும், அன்றாடம் நாம் சந்திப்பவர்களிடமும், நமக்கு அருகிலிருப்பவர்களிடமும் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் நமக்கும் அந்த அன்பென்ற வானம் வசப்படும்.
வாருங்கள் வசப்படுத்துவோம்  !!!

/ A post For Mother Teresa’s  Birthday Aug -26/

Tuesday, 14 January 2014

குற்ற பத்திரிக்கை

குற்றப்  பத்திரிக்கை  வாசிப்பது
குதூகலத்தைத்  தருகிறது எப்போதும்
படைத்தவனிடம் விடை கேட்பது
பலமடங்கு மகிழ்ச்சித்  தருகிறது. 

கடவுள் பேசிக்கொண்டிருந்த 
கடந்தக் காலங்களில் ஒருநாள் 
“இறைவா ,
படைப்பின் உச்சமென்றாய் என்னை
படைத்தது எல்லாம் எனக்கேயென்றாய்
கேட்பதற்கு நன்றாய் இருந்தது- கதைதானே  
கேட்டும் வைத்தேன் மகிழ்வோடு - ஆனால் 
கேள்வி ஒன்று  துளைக்கிறது இன்று. 
சிறப்புகள் பல பெற்ற எங்களால் 
பறக்க முடியவில்லையே ?
சிட்டுக் குருவி என்னைப்பார்த்து
சிரித்துவிட்டு போகிறது அய்யா”
கேட்டு வைத்தேன் இந்த கேள்வியை
பதில் பேச முடியுமா அவரால்?

வழக்கம் போல சிரித்த கடவுள்
பழக்கமில்லாத பதில் தர ஆரம்பித்தார்

“மகனே
நன்றாக பேசுகிறாய் -சிலசமயம்
நல்லதையும் பேசு- பலரால் முடியாதது அது
இறகுகளால்  ஆனதல்ல உன் சிறகுகள்
இதயத்தால் ஆனது. -
சுவர் கொண்டு அடைக்கப்பட்டிருந்தாலும்
மடை திறப்பது போல பொழியும் நாக்கு
ஒரு சிறகல்லவா?
நினைத்த மாத்திரத்தில்
நினையாத தூரம் செல்லும்
நினைவலைகளுக்கு நான் தராத சிறகா?
பகைமை களைந்து பகுத்தறிகிற போது
நீ உச்சமாகிறாய்- படைப்பபுக்கெல்லாம்

விழுந்தாலும் தடுமாறி எழுந்திருக்கும்
இலட்சிய வேட்கை தோன்றும்
நல்மனம் இருக்கும் நீ உயர்வல்லவா? 


அழகு வாய் திறந்து பழகு மொழி பேசினார் கடவுள்

சிரித்து வைத்தேன் சிந்திக்க முடியாமல்.

Wednesday, 1 January 2014

புது வாழ்வு -புது வாழ்த்து

அனுதினமும் ஆசைகளை மட்டும் அடுக்கி அடுக்கி
ஆக பெரியதாய் ஏமாற்றமடைந்தது போதும்,
இலட்சியங்களால் நிரப்புவோம் மனதை.
அன்பை விளக்கேற்றி ஆவலாய்  விநியோகிப்போம் 

நாளை நாளை என்று தினங்களும்,
வாரங்களும் ,மாதங்களும் கடந்து
365 நாளும் முழுகிப்போன -புளித்த
பழைய வருடக்  கதை மீண்டும் வேண்டாம்
நாட்களை சுதந்தரிப்போம்!. நமது பெயர்  எழுதுவோம் !!  

இனியும் பழைய துன்பங்கள் வேண்டாம்!
அணியும் புதுப்  புன்னகையே போதும்!! 

அம்மா, அப்பா,சொந்தங்கள்,மேலாளர்,
கடன்காரன், காதலர்,நண்பர்கள், நாய்க்குட்டி
எதிரி, எதிர்காலம் ,அடையாளங்கள் ,ஏமாற்றங்கள்
பேஸ்புக், டிவிட்டர், சொல்லக்கூடாத இன்னபிற ... 
இவர்களுக்காக  வாழும் உங்கள் வாழ்க்கையில்
உங்களுக்காகவும்  கொஞ்சூண்டு இடம் ஒதுக்குங்கள்.

இன்றைக்காவது 'வாழுவதைப் போல வாழுவதை'
விட்டு விட்டு நம் வாழ்க்கையை வாழ ஆரம்பிப்போம்!


 வாழ்த்துகள்

வரவேற்போம் புது வருடத்தை :) Welcome 2014

காதல்
நட்பு
கடவுள்
கவிதை
எதிர்பார்ப்பு
ஏமாற்றம்
எல்லாமே
 புதிதாய்
ஆரம்பிக்க
வருகிறது
இன்னொரு
365 இரவு பகல்.

வாடிக்கையாளராக இல்லாவிட்டாலும்
வேடிக்கைப் பார்க்கவாவது  வரவேற்போம்

புது  வருடத்தை :)

நன்றி! வணக்கம் !!


வருடத்தின் கடைசி நாள் இன்று. ஒரு வருடம் முழுதாய் ஓடிவிட்டது. நம்மில் பலருக்கு வருடங்கள் ஆரம்பிப்பது மட்டுமே நினைவில் இருக்கும்.அந்த வருடம் முடியும் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போதுதான் தோன்றுகிறது, “அட இவ்வளவு சீக்கிரமா ஒரு வருஷம் ஆகிப்போச்சா?”.

புது வருடங்கள் எப்போதுமே எதிர்பார்ப்புடன்  தான் ஆரம்பிக்கப் படுகிறது. நேற்று வரை வழி தெரியாத விஷயங்களுக்கு ஏதோ நாளை ‘புத்தாண்டி’லிருந்து   வழி பிறக்கும் என நம்ப ஆரம்பிக்கிறோம். “நம்பிக்கை அதானே எல்லாம்” என்று சமாதனம் சொல்லிக் கொள்கிறோம்   

“365 நாளும் மூச்சுவிட்டதை தவிர்த்து ஒன்றும்  பெரியதாக கிழிக்கவில்லை “ என்றும் “ஆமாம் முடிந்து போன வருடத்தில் எதை செய்து முடித்தேனோ?” என்றும் யோசிக்கும் உங்களுக்கும் எனக்கும் கூட புதுவருடம் ஆரம்பமாகும் காலங்களில் மனதில் ஒரு ‘புது விதமான மகிழ்ச்சி’ மட்டும் வருடம்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

அந்த மகிழ்ச்சியானது புதுமனைவியை கொண்டாடும் கணவனின் பார்வையோடுதான்  ஆரம்பமாகிறது, ஆனால் கடைசியில் பைலின்  புயல் கரை கடப்பது போல வடிந்து விடுகிறது.

ஒவ்வொரு கடந்துபோன நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வருடங்களும், நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றை விதைத்து விட்டுதான் போயிருக்கின்றன, அது நல்லதோ, கெட்டதோ, அதற்கான பயனை, அறுவடையை அடுத்து வரப்போகும் வருடங்கள்தான் தீர்மானிக்கின்றன.

என்னைப்பொறுத்த வரையில் ஒவ்வொரு வருடமும் எல்லா விதங்களிலும் வளர்ந்து 
கொண்டேயிருக்கிறேன். வளர்ச்சி என்கிற விஷயம்மட்டும் நீங்களே நினைத்தாலும் மாற்ற முடியாது. சென்ற வருடமும் உள்ளும் புறமும் நம்மை வளர்த்து விட்ட இறைமைக்கு நன்றி சொல்லுவோம்.
 புது வருட முன் முடிவுகள் :
எல்லா வருடக்கடைசியிலும் கடன்காரரை விட கேவலமாக நம்மைத்  துரத்தும் கேள்வி இது. பெரும்பாலும் பெருத்த சத்தங்களோடு தொடங்கப்பட்டு பின்னர் அப்படியே காணாமல் போகின்றவையாக இருக்கின்றன. அல்லது நம்முடைய நலத்தை,பண்புநலனை, நம்மை சார்ந்திருக்கும் சிலரை திருப்திப்படுத்தும் போக்கை கட்டிகாக்க எடுக்கும் உறுதிமொழியாகவே இவை அமைகின்றன. மனதிருந்தால் முடிவெடுத்து கொஞ்ச நாள் நல்லவனாக இருந்து பாருங்கள் கஸ்டம் புரியும்.
 எனக்கு பிடித்த எல்லா வருடமும் எடுக்கிற சில முன் முடிவுகள் உங்களுக்காக ,
1.எல்லாரைப்பற்றியும் குறை சொல்வதை குறைத்துக்கொள்ளலாம். — போரடிக்குதுங்க கொஞ்ச நாளைக்கு விடுப்பு விடலாமே
2. வேளாவேளைக்கு சாப்பிடலாம். -உங்க சாப்பாட்டங்க
3.எதையாவது அவ்வப்பொழுது வாசிக்கலாம்- செய்திதாளாவது/புத்தக வடிவில்- கண்ணுக்கும் கரண்ட் பில்லுக்கும் நல்லது
4.பயணம் போங்கள். குறைந்தபட்சம் எப்பொழுதும் ஆபீஸ் போகும் ரூட்டை மாற்றி இன்னொரு வழியில் பயணம் போங்கள். உலகை ரசியுங்கள்.
5.பிஸி பிஸி என்று சொல்வதை நிறுத்திவிட்டு மிசின்,வேலை,கோப்பு என்கிற ஜடங்களுக்கு நடுவே மனிதர்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள் – நான் மிசின் இல்லங்கிறத நிருபிக்கவாவது
6. மனது என்கிற வஸ்து உங்களைப் போலவே எல்லாருக்கும் இருக்கிறது என்பதை நினைத்துக் கொள்ளுங்கள் அடிக்கடி.
7.உங்களின் நண்பர்களுடன் எப்பொழுதும் தொடர்புடன் இருங்கள்- அட நண்பிகளையும் சேத்துதாம்பா
  பண்படுத்தி கரைந்து போகிற
வருட முடிவின் சாம்பல்
முளைக்கப்போகும்
பூச்செடிக்கு உரமாகட்டும் !
புத்தாண்டிலே,
 நினைவுகள்  நிஜங்களாகட்டும்
நிதம் நிதம்  புதிதாகட்டும்
வளங்கள் வாழ்த்தி பாடட்டும்
அன்பு அனைவருக்கும் சொந்தமாகட்டும்
 இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)